

பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் குவிந்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த போது, மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர். மொத்தம் 15 பேரின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள், கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்தனர். மேலும் சிலர் இ-மெயில் மூலமும் புகார் அளித்தனர். இந்த புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார். சின்னசாமி மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.