16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
Published on

மங்களூரு-

16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

16 வயது சிறுமி

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். அவள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தாள். இந்தநிலையில் சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அதேப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது30) என்பவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த விக்னேஷ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை விக்னேஷ் மிரட்டி உள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை, விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர்.

10 ஆண்டு சிறை

அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி பெற்றோரிடம் அழுதுள்ளாள். இதையடுத்து பெற்றோர் இதுகுறித்து கோட்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது சய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. கோட்டா போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சீனிவாஸ் சுவர்ணா நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விக்னேசுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.21,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com