

ராய்பூர்,
சட்டீஸ்காரின் பலூடாபஜார் மாவட்டத்தில் ரோஹசி கிராமத்தில் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட காப்பக இல்லம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய பசுக்களை பிடித்து வந்து கிராம மக்கள் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் காப்பகத்தில் அடைக்கப்பட்டு இருந்த 18 பசுக்கள் மூச்சு திணறி இறந்துள்ளன. போதிய இடவசதி இல்லாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவற்றை உள்ளூர் கிராம மக்கள் புதைப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின் அவை புதைக்கப்பட்டன.
இதனால் கிராமத்தில் நோய் தொற்று எதுவும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
கடந்த வருடம் ஆகஸ்டில் அரசு உதவி பெறும் காப்பகங்களில் உரிய பராமரிப்பின்றி மற்றும் தீவனமின்றி 200 பசுக்கள் இறந்தன. இதுபற்றி ராமன் சிங் தலைமையிலான அரசு விசாரணை மேற்கொள்ள நீதி ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது.