கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுப்பு - மத்திய அரசு தகவல்

கடந்த 5 ஆண்டில் சிறப்பு குழந்தைகள் 1,404 பேர் தத்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் வெறும் 1,404 பேர் மட்டுமே.

கடந்த மாதம் 5-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது.

19 மாநிலங்களில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தத்தெடுக்கப்படுவதற்கென யாருமே இல்லை. 2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர். சிறிதளவு குறைபாடு இருந்தாலும், சிறப்பு குழந்தைகளை தத்தெடுக்க யாரும் முன்வருவது இல்லை என்று தெரிய வந்துள்ளது.

அதே சமயத்தில், வெளிநாடுகளில் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் தீபக்குமார் சுட்டிக்காட்டினார். தான் தலைவராக இருந்தபோது, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகமாக தத்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com