19-வயதில் 9 பேருக்கு டிமிக்கி...அத்தையுடன் சேர்ந்து மோசடி செய்த கல்யாண ராணி கைது

திருமணம் ஆகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு, அத்தையுடன் சேர்ந்து தப்பியுள்ளார்.
ஸ்ரீகாகுளம்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவைச் சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை.
இதையடுத்து மனைவியை காணாததால் பதறிய வாலிபர் ரெயிலுக்குள் வாணியை தேடி அலைந்தார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தனர். அந்த பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு வாணி தப்பிச் சென்றுவிட்டது தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் கோபம் அடைந்தனர்.இதைத் தொடர்ந்து மணமகன் குடும்பத்தினருக்கு, இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சந்தியா என்பவர் வீட்டில் வாணி இருப்பதாக தகவல் கிடைத்தது.
வாணியை தேடி அங்கு சென்ற அவர்கள், சந்தியாவிடம் தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் வழக்கு தொடர்ந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையை பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அத்தை சந்தியா, வாணியை சிறுவயதிலேயே தன் வலையில் விழ வைத்துள்ளார்.
திருமணம் ஆகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு, இருவரும் தப்பி விடுவார்கள். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களில் திருமணம் ஆகாத 8 இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ள தகவல் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வாணி, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 9-வது திருமணத்தில் தான் வசமாக சிக்கி, அவரது வண்டவாளங்கள் வெளியே தெரிய வந்துள்ளன.போலீசார் விசாரணைக்கு பயந்து வாணியும், அவரது அத்தை சந்தியாவும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தனிப்படை போலீசார் தேடுவது குறித்து தகவல் அறிந்த வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி ஆகியோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்கள், வாணியுடன் எடுத்த தங்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வழங்கியுள்ளனர்.அவற்றை கைப்பற்றிய போலீசார், வாணியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 19 வயது இளம்பெண் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






