

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சையது யாசின், மாஷ் முனீர் அகமது ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
விசாரணையில் கைதான இருவரும் ஐ.எஸ். அமைப்பில் பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வது குறித்து பயிற்சிகளை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
அவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதைடுத்து போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவான ஷாரிக் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.