

கடலூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 150 மி.லி. அளவுள்ள 140 மதுப்பாக்கெட்டுகள் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து மதுப்பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.