கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்துள்ளது.
கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
Published on

பெங்களூரு,

இந்தியா உள்பட உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவி காணப்படுகிறது. இந்த தொற்றுடன் தொடர்புடைய சுவாச பாதிப்புகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்துள்ளது. இதன்படி, பேப்டிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியானது.

அந்த பெண் குழந்தை சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறியுள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது. இதேபோன்று, கடந்த 3-ந்தேதி 8 மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது.

இந்த 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

எனினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் இந்த ஆண்டு முழுவதும் கண்காணிப்பு பணியானது தொடர்ந்து நடைபெறும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இந்த தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், சீனாவில் உள்ள நடப்பு சூழல் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com