

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் தெற்கு பகுதியில் உள்ள புல்வமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன்னும் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என்று கருதப்படுவதால், தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.