நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
Published on

புதுடெல்லி,

பிரபல இந்திப்பட நடிகை திஷா பதானி. இவர் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டு முன்பு, கடந்த 12-ந்தேதி அதிகாலையில் ரோஹித் கோதாரா-கோல்டி பரார் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். மேலும் திஷாபதானியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் யார் என்பதை அடையாளம் கண்டனர்.

அதில் ஒருவர் ரோஹ்தக்கில் உள்ள கானியைச் சேர்ந்த ரவீந்தர் என்பதும் மற்றொருவர் சோனிபட்டில் உள்ள இந்தியன் காலனியைச் சேர்ந்த அருண் என்றும் தெரியவந்தது. இவர்களை பிடிக்க டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 3 மாநில போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. சிறப்பு படையினர் 3 மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்தநிலையில் டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள டிரோனிகா நகரில் பதுங்கி இருந்த ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சிறப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.

அவர்கள் இருவரும் நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரவீந்தர் மற்றும் அருண் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், ஏராளமான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com