சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி

சித்ரதுர்கா அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் மராட்டியத்தை சேர்ந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாய் குறுக்கே வந்ததால் இந்த விபத்து நேர்ந்தது.
சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி
Published on

சிக்கமகளூரு:

கார் கவிழ்ந்து விபத்து

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர்கள் மான்சி(வயது 40), உஜ்வல் பார்வி(வயது 44) மற்றும் சச்சின் பார்வி. இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் காரில் திருப்பதிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு மராட்டியத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். காரை, சச்சின் பார்வி ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தாலுகா(மாவட்டம்) சிக்கபென்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பிரேக் பிடித்து காரை, டிரைவர் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் பலத்த சேதமடைந்தது.

2 பெண்கள் சாவு

இதில் இடிபாடுகளில் சிக்கி காருக்குள் இருந்த மான்சி, உஜ்வல் பார்வி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சச்சின் பார்வி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பரமசாகர் போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பெண்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com