மும்பை: தொழிற்சாலையில் பாய்லர் விழுந்ததில் 2 பேர் பலி

பாய்லர் விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை: தொழிற்சாலையில் பாய்லர் விழுந்ததில் 2 பேர் பலி
Published on

மும்பை,

மும்பை தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ள சரவ்லியில் (மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழகம்) அமைந்துள்ள சாய பிரிவில் நேற்று இரவு எப்போதும் போல தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது அங்கிருந்த பாய்லர் திடீரென விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அங்கு இருந்த பாய்லரை கிரேன் மூலம் தூக்கி கொண்டிருந்த போது, அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது தவறி விழுந்தது. இந்த விபத்தில் பலராம் சவுத்ரி(55) மற்றும் பாண்டுரங்கன் பாட்டீல் (65) ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com