

அரபிக் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை அவ்வவ்போது கைது செய்வது வழக்கம். அப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் மீனவர்களை சில நேரங்களில் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்யும். அப்படி இல்லாத பட்சத்தில் தண்டனை காலம் முடிந்த பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர்.
அந்த வகையில், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 350 பேர் தண்டனை காலம் முடிந்து, ஒவ்வொரு குழுக்களாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லந்தி சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 20 பேரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 20 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாகா எல்லையில் இந்தியா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.