

புதுடெல்லி,
இணையத்தை பயன்படுத்தும் சிறுவர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேம்கள் மூலம் குறிவைக்கப்பட்டு, ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் சுரண்டலுக்கு ஆளாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் இணையத்தை பயன்படுத்தும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டிற்கு பலமுறை இத்தகைய அச்சுறுத்தல்களை சந்திப்பதாக அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
உலகளவில் 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வழியில் பாலியல் ரீதியான கொடுமைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தோராயமாக 1.5 கோடி குழந்தைகள் தங்களின் விருப்பமே இன்றி இணையத்தில் பாலியல் ரீதியான ஆபாச உள்ளடக்கங்களை பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். சுமார் 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாச படங்களை பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் உச்சகட்ட கொடுமையாக, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகளவில் முழுமையாக பார்க்கும்போது, இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளை தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களை பயன்படுத்தி அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை 100 விழுக்காடு உறுதி செய்யவும், இணையவழி பாலியல் குற்றங்களை தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் உடனடியாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆய்வு பலமாக வலியுறுத்துகிறது.