

உதம்பூர்,
இந்திய ராணுவத்தின் வடபகுதி தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் இன்று நடந்த 2 நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியே ஊடுருவுவதற்காக 200 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அவர் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை பற்றி தொடர்ந்து பேசும்போது, எல்லை பகுதியில் 6 பெரிய பயங்கரவாத முகாம்களும், 29 சிறிய முகாம்களும் என மொத்தம் 35 முகாம்கள் உள்ளன.
இதேபோன்று, பல்வேறு ராணுவ அமைப்புகளுடன் தொடர்புடைய தற்காலிக தாக்குதல் தளங்களும் நிறைய உள்ளன. இதனால், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிற அமைப்புகளின் நெருங்கிய தொடர்பு மறுக்க முடியாதது என கூறியுள்ளார்.
கடந்த 11 முதல் 12 மாதங்களாக போர்நிறுத்த ஒப்பந்த புரிதல் மிக நன்றாக வேலை செய்கிறது. நடப்பு ஊடுருவல் விகிதம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.