உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்நாள் சிறை - டெல்லி கோர்ட்டு அதிரடி

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ. செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ.வுக்கு வாழ்நாள் சிறை - டெல்லி கோர்ட்டு அதிரடி
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர், குல்தீப் சிங் செங்கார் (வயது 53).

இவரிடம் உன்னாவை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 4-ந் தேதி வேலை கேட்டு சென்றார். அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 3-ந் தேதி செங்கார் தூண்டுதலின்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தாக்கப்பட்டார்; அவர்மீது பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்தனர் என்ற புகார் எழுந்தது.

ஏப்ரல் 8-ந் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அதற்கு மறுநாளே, காவலில் வைக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார்.

ஏப்ரல் 10-ந் தேதி கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்துதான், வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

மூன்றே நாளில் செங்காரும், அவரது கூட்டாளி சசி சிங் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டப்படி அவர்கள் மீது சி.பி.ஐ. ஜூலை 11-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த ஜூலை 17-ந் தேதி அந்த சிறுமியும், அவரது குடும்பத்தாரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதினர்.

அதற்கு மறுநாளில் (ஜூலை 18-ந் தேதி), பாதிக்கப்பட்ட சிறுமி சட்டப்படி மேஜரான நிலையில், தனது உறவினர்களுடன் காரில் சென்றபோது லாரி மோதியது. இதில் அவரும், அவரது வக்கீலும் படுகாயம் அடைந்தனர். அவரது உறவுப்பெண்கள் 2 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் மற்றும் 9 பேர் மீது போலீசார் கொலை, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த செங்கார் பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜூலை 30-ந் தேதி, பாதிக்கப்பட்ட பெண், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது அம்பலத்துக்கு வந்தது. அதை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஆகஸ்டு 1-ந் தேதி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளையும் டெல்லி கோர்ட்டுக்கு மாற்றியது.

கற்பழிப்பு வழக்கு விசாரணையை 45 நாளில் முடிக்குமாறும் உத்தரவிட்டது.

அதையடுத்து அந்த வழக்கு விசாரணை டெல்லி, திஸ் ஹசாரி கோர்ட்டில் தினந்தோறும் நடந்து வந்தது.

ஆகஸ்டு 9-ந் தேதி செங்கார் மீதும், அவரது கூட்டாளி சசி சிங்மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண், லக்னோ மன்னர் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து, டெல்லிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இந்த வழக்கில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கற்பழிப்பு வழக்கில் கடந்த 10-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

16-ந் தேதி நீதிபதி தர்மேஷ் சர்மா, எம்.எல்.ஏ. செங்கார் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். அதே நேரத்தில் அவரது கூட்டாளி சசி சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என கூறி விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் தண்டனை விவரத்தை நீதிபதி தர்மேஷ் சர்மா நேற்று அறிவித்தார்.

அப்போது அவர் எம்.எல்.ஏ. செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

செங்கார் தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில்தான் கழித்தாக வேண்டும்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:-

* அபராத தொகை ரூ.25 லட்சத்தை 1 மாதத்தில் செலுத்த வேண்டும். செங்கார் தரப்பில் செலுத்தாவிட்டால், உத்தரபிரதேச மாநில அரசு தனது கஜானாவில் இருந்து கொடுக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக மேலும் ரூ.10 லட்சத்தை, அவரது தாயாரிடம் வழங்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினர் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை சி.பி.ஐ. ஆய்வு செய்ய வேண்டும்.

* டெல்லி மகளிர் கமிஷன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ள வாடகை வீட்டில் அந்தப்பெண்ணும் குடும்பத்தினரும் தொடர்ந்து மேலும் 1 வருட காலத்துக்கு வசிக்கலாம். அதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் வாடகையை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தண்டனை விவரத்தை கேட்டபோது, செங்கார் அழுதார்.

கற்பழிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், எஞ்சிய 4 வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com