

பெங்களூரு,
கர்நாடகத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி, பி.எம்.டி.சி. உள்ளிட்ட 4 அரசு போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், லாபகரமாக செயல்படுவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் அரசு சார்பில் ஓய்வு பெற்ற அதிகாரியான சீனிவாஸ் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வருகிற 31-ந் தேதி வரை(அதாவது நாளை) பொதுமக்களை தொடர்பு கொண்டு, போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, அவர்களது கருத்துகளை கேட்டு வருகின்றனர். இதுதவிர ஓய்வு பெற்ற ஊழியர்கள், அதிகாரிகளுடனும் பல முறை ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளது.
இந்த நிலையில், சீனிவாஸ் மூர்த்தி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் கர்நாடக போக்குவரத்து கழகங்கள் கொரோனா, அதிகாரிகளின் அலட்சியம், 4 கழகங்களிலும் நடந்த ஊழல், முறைகேடு உள்ளிட்ட காரணங்களால், ரூ.2,130 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும் போக்குவரத்து கழகங்களை மறுசீரமைக்கவும், லாபத்துடன் செயல்படவும், நஷ்டத்தில் இருந்து போக்குவரத்து கழகங்களை மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுபற்றி அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் அதிகாரி சீனிவாஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.