இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன: மத்திய அரசு

இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன: மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன்பின்னர் கடந்த ஏப்ரல் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 471 பேருக்கு முதல் டோசும், அதே வயதுடைய நபர்களில் 76,723 பேருக்கு 2வது டோசும் நேற்று செலுத்தப்பட்டு உள்ளது.

37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 37 ஆயிரத்து 869 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 134 பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த வயதுடைய நபர்களில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெற்று பயனடைந்து உள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com