திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 24 மணிநேர மருத்துவ சேவை

திருமலையில் பக்தர்களுக்காக மொத்தம் 16 மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 24 மணிநேர மருத்துவ சேவை
Published on

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேவையான சமயங்களில் உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் விரிவான மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.

திருமலையில் பக்தர்களுக்காக மொத்தம் 16 மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. அஸ்வினி மருத்துவமனை பிரதான மருத்துவமனையாக இருந்து, அதற்கு ஆதரவாக அப்பல்லோ கார்டியாக் மையமும் செயல்படுகிறது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் கம்பார்ட்மெண்ட்-6 எதிரில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்1-ல் உள்ள ஒருங்கிணைந்த ஏ.ஐ. கட்டுப்பாட்டு மையம் அருகில், கல்யாணகட்டா, அரசு போக்குவரத்துக்கழக சர்க்கிள், அமைனிட்டி காம்ப்ளக்ஸ்-5, ஸ்ரீவாரி கோவில், அலிபிரி நடைபாதையில் 1500-வது படி, காலிகோபுரம் மற்றும் நாராயணகிரி ஷெட்களில் 24 மணி நேர மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மாத்ருஸ்ரீ தாரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அமை னிட்டி காம்ப்ளக்ஸ்-2, அலிபிரி பாத மண்டபம், ஏழாவது மைல், பாஷ்ய காரர் சன்னிதி ஆகிய இடங்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 1,200-வது படியில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மருத்துவ வசதி உள்ளது.

பிரம்மோற்சவ விழா காலங்களில் ராம் பகீச்சா-1 மற்றும் பாபவிநாசனம் பகுதிகளில் கூடுதல் மருத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன. நடமா டும் முதலுதவி மையங்களும் பக்தர்களுக்கு உடனடி உதவி வழங்குகின்றன.

திருமலையில் அவசர மருத்துவச் சேவைக்காக மொத்தம் 9 ஆம்புலன்சுகள் உள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்கள் முதலில் அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். மேம்பட்ட சிகிச்சை தேவைப்பட்டால், திருப்பதி ருயா, பெர்டு, சுவிம்ஸ் மற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றுக்கு இலவசமாக மாற்றப்படுகின்றனர்.

பிரம்மோற்சவ விழா மற்றும் ரதசப்தமி நாட்களில் கூடுதல் ஆம்புலன்சுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

128 மருத்துவப் பணியாளர்களுடன் இடையறாத சேவை, 8 மருத்துவர்கள் மற்றும் 120 துணை மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் சேவையில் உள்ளனர்.

திருமலையில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் தினமும் சராசரியாக 2,400 பக்தர்கள் மருத்துவச் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

அஸ்வினி மருத்துவமனையில் இ.சி.ஜி. எக்ஸ்-ரே, ஆய்வக பரிசோதனை. நெபுலைசேஷன், ஆக்ஸிஜன் உதவி மற்றும் காய சிகிச்சை உள்ளிட்ட முழுமையான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பு சிகிச்சை தேவைப்படும் பக்தர்கள் திருப்பதியில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, திருப்பதி தேவஸ்தானம் 24 மணி நேர மருத்துவச் சேவைகளை விரிவாக வழங்கி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com