

கொச்சி
கேரளாவில் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 26 பேர் பலியான நிலையில், அரசு மீது பினராயி விஜயன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
கேரளாவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலதாமதத்துடன் தொடங்கியது. எனினும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தபோது, நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கேரளாவில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 26 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், கண்ணூர் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன், அரசின் நிவாரண முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியாக முழு அளவில் ஆதரவு அளிப்போம்.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் பல்வேறு தோல்விகள் காணப்படுகின்றன என்றார். கண்ணூர் மாவட்டத்தில் செருபுழா மற்றும் பேராவூர் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலச்சரிவு ஏற்பட்டு முடங்கிய சாலை சீர் செய்யப்படவில்லை. காணாமல் போனவர்களை கண்டறியும் பணியிலும் சுணக்கம் காணப்படுகிறது.
2018 மற்றும் 2019 ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபோது, முன்அனுபவம் எதுவுமின்றி அந்த பேரிடர்களை கேரளா திறம்பட எதிர்கொண்டது.
ஆனால், தற்போது கனமழை பெய்தபோது, அதற்கேற்ப பருவநிலை கால எச்சரிக்கைகளை ஆய்வு செய்யவோ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ போதிய விழிப்புணர்வு இன்றி அரசு நிர்வாகம் இருந்துள்ளது. ஜூலை 31-ந்தேதி கனமழை தொடங்கியபோது, ரெட் அலர்ட் சரியான முறையில் அறிவிக்கப்படவில்லை. மழை தொடங்கியபின்னரே எச்சரிக்கை வெளியிடப்பட்டது. நிலச்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டபோதும் தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார்.