இந்திய சிறைகளில் 27 சதவீதம் கைதிகள் எழுத்தறிவு அற்றவர்கள் - மத்திய அரசு தகவல்

இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 27 சதவீதம் பேர் எழுத்தறிவு அற்றவர்கள் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய சிறைகளில் 27 சதவீதம் கைதிகள் எழுத்தறிவு அற்றவர்கள் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி இந்திய சிறை தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் குறிப்பாக சிறைக்கைதிகளின் கல்வியறிவு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 600 கைதிகளில் 1,32,729 பேர் (27.37 சதவீதம்) எழுத்தறிவு அற்றவர்கள் என தெரியவந்துள்ளது. 1,98,872 (41.55 சதவீதம்) பேர் 10-ம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் ஆவர். 21.52 சதவீதத்தினர் அதாவது 1,03,036 பேர் 10-ம் வகுப்புக்கு மேல் ஆனால் பட்டப்படிப்புக்கு குறைவாக படித்துள்ளனர்.

30,201 பேர் (6.31 சதவீதம்) பட்டதாரிகளாகவும், 8,085 (1.68 சதவீதம்) பட்ட மேற்படிப்பு படித்தவர்களாகவும், 5,677 பேர் (1.18 சதவீதம்) தொழில்நுட்ப டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் உள்ளனர்.

கைதிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1,01,297 கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com