

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள சட்டபால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே, பல மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
என்கவுண்டர் நடைபெற்ற இடம் அருகே, வேகமாக சென்ற வாகனம் மோதியதில், உள்ளூர் வாசியான அதில் அகமது யாடூ என்பவர் பலியானார். ஆனால், பாதுகாப்பு படையினர் சுட்டதில் யாடூ பலியானதாக கூறி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் போராடிய மக்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.