

பெங்களூரு,
கர்நாடகாவில் விலங்கு கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூரில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள காட்டில் நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேட்டையாட வந்ததாக கருதப்படும் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவிரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த 3 பேரின் மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அலுவலகத்தை சேதப்படுத்தினர். இதில் வனத்துறையின் பெயர் பலகை உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க ஹனூரில் மூன்று படைப்பிரிவு (platoon) ரிசர்வ் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்டையாட வந்ததாக கருதப்படும் மூவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், நேற்று (ஆகஸ்ட் 14ம் தேதி) நள்ளிரவில் ஹனூர் வனவிலங்குப் பிரிவின் கீழ் உள்ள ஷாக்யா (Shagya) எல்லைக்குட்பட்ட ஹோலேமுரதட்டி காட்டில் நடைபெற்றது.
தற்போது கிடைத்த தகவல்களின்படி, வேட்டையாட வந்ததாக கருதப்படும் ஆறு பேர் கொண்ட கும்பலை சரணடையுமாறு கூறியபோது இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல் ஒரு காட்டு விலங்கை கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களில் மூவர் கொல்லப்பட்டனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் கொல்லேகால் (Kollegal) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் வனத்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களாக அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.