

நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரைச்சேர்ந்த சிறுவர்கள் 8 பேர், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலா சென்றனர். சுற்றுலா தளமான ஹிங்னா பகுதியில் உள்ள, பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்கச்சென்றனர். ஏரியில் குளித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக 3 சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.
இதைக்கவனித்த சக நண்பர்கள் உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஏரியில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர்.
பலியான மூன்று பேர்களில் ஒரு சிறுவனுக்கு 14 வயதும் ஏனைய இருவருக்கு 17 வயதும் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து மரணம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்கள் தின கொண்டாட்டத்தின் போது சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.