

புதுடெல்லி,
வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்கிற மசோதாவை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் மக்களவையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதே நேரம் மாநிலங்களவையில் முக்கியமான ஒரு மசோதாவை முதலில் தாக்கல் செய்ய உள்ளனர். அது, வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் தேசிய கவுரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ஆகும். இந்த மசோதாவுக்கு சமீபத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, தேசிய கீதம் அல்லது தேசியப்பாடலை (வந்தே மாதரம்) பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர் அல்லது இடையூறு செய்பவர், அல்லது அவ்வாறு பாடும் கூட்டத்துக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதத்துக்கு ஏற்கனவே இது போன்ற கவுரவ தடுப்பு நடவடிக்கை இருக்கும் நிலையில் வந்தே மாதரம் பாடலுக்கும் தற்போது அது நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது.