கேரளாவில் நாயை கட்டி வைத்து, அடித்து கொடூரமாக கொன்ற 3 இளைஞர்கள்

கேரளாவில் வளர்ப்பு நாயை கட்டி வைத்து, அடித்து கொடூரமாக கொன்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் நாயை கட்டி வைத்து, அடித்து கொடூரமாக கொன்ற 3 இளைஞர்கள்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, சிறுவர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டி வைத்து, துடிக்க துடிக்க கட்டையால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

சிறுவர்களின் வெறித்தனம் அடங்கிய இந்த வீடியோ இணைய தளங்களில் வெளிவந்து வைரலானது. இதனையடுத்து #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது.

இந்த சிறுவயதிலேயே இத்தனை கொடூரம் என்றால் இவர்கள் வளர்ந்தால் சமூகம் என்னவாகும்? இவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

அந்த நாயின் உரிமையாளர் அளித்த புகார் அடிப்படையில், விழிஞ்சம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கடும் கண்டனம் வெளியிட்ட நிலையில், நாயை அடித்துக்கொன்ற 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனை கேரள ஐகோர்ட்டு தாமாகவே முன் வந்து வழக்குபதிவு செய்திருக்கிறது. நாயின் நினைவாக புரூணோ என மனுவின் பெயரை நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் கோபிநாத் மாற்றி எழுதி விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

மனித கொடூர செயலுக்கு இரையான, உதவியற்ற நிலையில் இருந்த அந்த வளர்ப்பு நாய்க்கு சரியான அஞ்சலி செலுத்தும் வகையில் இது அமையும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விலங்குகளுக்கு எதிராக வருங்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டது.

சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று, மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றிற்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com