பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்

தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிது.
பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்
Published on

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நந்திகொண்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் தேவைக்காக அங்கு குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேற்று தெரிவித்தனர். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த தண்ணீரை உடனடியாக நிறுத்தினர். பின்னர், குரங்குகளை அப்புறப்படுத்திய பின்னர் தண்ணீரை அகற்றினர். தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிது. மேலும், குரங்குகள் செத்து மிதந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள், மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தண்ணீர் தொட்டிக்குள் குரங்குகள் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com