போலிசான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம்

பீகாரில் 2006 முதல் 2015-ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் பணி நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பணி நீக்கம்
Published on

பாட்னா,

பீகாரில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

பீகாரில் கடந்த 2006 முதல் 2015-ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலி பட்டங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை வழங்கி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் போலியான கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்ற சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களும் வழங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. இது மாநில கல்வித்துறைக்கு மட்டுமின்றி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணி நீக்கம்

எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் கல்வி மந்திரி மிதிலேஷ் திவாரி உறுதிபட தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பீகாரில் 2006 முதல் 2015-ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் பணி நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. போலி பட்டங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை வழங்கி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணி நியமனம் பெற்று உள்ளனர். இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பின், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள், ஊழலை சகித்துக்கொள்ளாது. அதேநேரம் இந்த விவகாரத்தில் முந்தைய நிதிஷ்குமார் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு கூறினார்.

பணி விலகியவர்களுக்கும் சிக்கல்

இதற்கிடையே போலி சான்றிதழ்கள் கொடுத்து பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை வட்டியுடன் திரும்ப வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து சில ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர். ஆனால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பீகார் கல்வித்துறையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கும் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com