

புதுடெல்லி,
கொரோனா தொற்று சாதாரண மக்களை காவு வாங்குவது போல, டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களையும் அதிக அளவில் பலி வாங்கி வருகிறது. அந்தவகையில் கொரோனா 2-வது அலையில் மட்டும் இந்தியா முழுவதும் மொத்தம் 329 டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) அதிர்ச்சித்தகவலை வெளியிட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக பீகாரில் 80 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக டெல்லி (73), உத்தரபிரதேசம் (41), ஆந்திரா (22), தெலுங்கானா (20) என பட்டியல் நீண்டு வருகிறது.
இந்திய மருத்துவ சங்கத்தின் பல்வேறு கிளைகள் அளிக்கும் தகவல்களின் மூலம் மட்டுமே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இது சிக்கலான விவகாரம் என்பதால் பலியானவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை எனவும் ஐ.எம்.ஏ. தலைவர் டாக்டர் ஜெயலால் கூறியுள்ளார்.
கொரோனாவால் சராசரியாக குறைந்தபட்சம் 20 டாக்டர்களாவது தினசரி பலியாவதாக கூறிய அவர், இது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றும் டாக்டர்களின் மொத்த தரவு என்றும் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையில் 748 டாக்டர்கள் மரணத்தை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.