

ஐதராபாத்,
பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை பின்பற்றி, தெலுங்கானா மாநில அரசு, தனது மாநிலத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வந்துள்ளது.
அதை அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில், உயர் கல்வி நிலையங்களில் இனிமேல் மாணவர் சேர்க்கை நடத்தும்போது, நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கும்வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் பணிகள் மற்றும் சேவைகளில், நலிந்த பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்படும் 10 சதவீத ஒதுக்கீட்டில், அந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 33.3 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தற்போது இடஒதுக்கீடு அளவு 50 சதவீதமாக உள்ளது. நலிந்த பொதுப்பிரிவினரின் இடஒதுக்கீட்டையும் சேர்த்து, இது 60 சதவீதமாக உயர்கிறது.