

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்குப் பதில் அளித்த மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:-
நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே பாலங்களை இந்திய ரெயில்வே பராமரித்து வருகிறது. அவற்றில் 34 ஆயிரத்து 665 பாலங்கள் நூறாண்டுகள் பழமையானவை. தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ரெயில்வே பாலங்களின் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன்பு அனைத்து பாலங்களையும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். ஒட்டுமொத்த ரெயில்வே அமைப்பின் பாதுகாப்பு குறித்து கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான் கடந்த 22 மாதங்களாக பெரிய விபத்து எதுவும் நடைபெறவில்லை. ரெயில்வே வாரியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு தலைமை இயக்குனர் பதவியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.