பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல்

சத்தீஷ்காரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல்
Published on

ராய்பூர்,

சத்தீஸ்காரில் முதல் கட்ட தேர்தல் வருகிற 12ந் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில் ஆகாஷ் நகர் பகுதியில் கண்ணி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டது. நக்சலைட்டுகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் பஸ் சிக்கி உருக்குலைந்தது. இந்த கோர சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர், பஸ் டிரைவர் மற்றும் கன்டக்டர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தண்டேவாடா மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்டேவாடா மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஜக்தல்பூர் நகரில் நாளை பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com