பஸ் மீது மோதி டீக்கடைக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி; 4 பேர் பலி

பஸ் மீது மோதி டீக்கடைக்குள் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
Image courtesy: X
Image courtesy: X
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலி அருகே சம்ர்ஜோலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலையில் இன்று காலை பஸ் மீது எதிரே வந்த டேங்கர் லாரி மோதியதில், டேங்கர் லாரி சாலையோர டீக்கடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பவானிபாட்னாவில் இருந்து பெர்ஹாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் மீது எதிரே வந்த டேங்கர் லாரி மோதியது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரி அருகே இருந்த டீக்கடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஒருவர் மற்றும் டீக்கடையில் அமர்ந்திருந்த 3 பேர் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com