மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு, சூரசந்த்பூர் மற்றும் தவுபல் மாவட்டங்களில் இருந்து குறைந்தது இரண்டு வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிககளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கை துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






