

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் 370-வது பிரிவு அரசியல் சட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 மாதகாலமாக அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காஷ்மீர் மாநில நிர்வாகம் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த 4 அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது. இதில் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி அப்துல் ஹக்கான், முன்னாள் சபாநாயகர் நசீர் அகமது குரேசி, மக்கள் மாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அப்பாஸ்வானி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரஷித் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.