4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்; 5 மணி வரையிலான வாக்கு சதவீத நிலவரம் வெளியீடு


4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்; 5 மணி வரையிலான வாக்கு சதவீத நிலவரம் வெளியீடு
x

கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் 70.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி,

குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று முன் தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இதன்படி, குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் என மொத்தம் 5 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது.

இன்று மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு சில மையங்களை தவிர, அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மாலை 5 மணி வரை பதிவான வாக்கு சதவீத விவரம் வெளிவந்து உள்ளது. இதில், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, நிலாம்பூர் தொகுதியில் அதிக அளவாக 70.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளில் முறையே 54.61 மற்றும் 54.49 சதவீத வாக்குகளும், பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் 49.07 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

1 More update

Next Story