

மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பஹொர் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே, வீட்டின் அருகே நேற்று விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானார். குழந்தையை பெற்றோர், உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குழந்தையை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் சிறுமியை அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதனை தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக முதியவர் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.