

நகரி,
தெலுங்கானா மாநிலம் நார்சங்கி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியி ருப்பில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று, இவர்களது 4 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு இருவரும் வேலைக்குச் சென்றனர். மதியம் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர், சிறுமியை அழைத்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து பி.ஆர்.எஸ். தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் பிஸ்வாஸ் (வயது 25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சாக்லெட் தருவதாக கூறி சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.