

புதுடெல்லி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஜெனரல் இயக்குனர்கள் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டனர். அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற அனைத்து பிரிவுகளிலும் போர் நிறுத்தம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த உடன்படிக்கையானது, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 24 மற்றும் 25ந்தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் அமலுக்கு வந்தது. இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று கூறும்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே, போர் நிறுத்த புரிந்துணர்வு கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பின்பு, எல்லையில் அத்துமீறல் என்பது ஏறக்குறைய பூஜ்யம் என்ற அளவில் குறைந்து விட்டது.
எனினும், இந்தியாவுக்குள் ஊடுருவும் வகையில் எல்லைக்கு அந்த பக்கம் 350 முதல் 400 பயங்கரவாதிகள் வரை முகாம்களில் தயாராக உள்ளனர் என உளவு தகவல் கிடைத்து உள்ளது. மறைமுக போர் தொடர்ந்து வருகிறது. அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து நாம் எச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டியுள்ளது. அச்சுறுத்தலை புறந்தள்ள முடியாது என கூறியுள்ளார்.