இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்வு..!!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 415 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டு, 26-ந்தேதி கவலைக்குரிய வைரஸ் திரிபு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட ஒன்று, ஒமைக்ரான் வைரஸ்.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

உலகை அச்சுறுத்தி வருகிற இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. கர்நாடகத்தில் முதலில் 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த 23 நாட்களில் நாட்டின் 17 மாநிலங்களுக்கு பரவி வேகம் காட்டி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி மராட்டியத்தில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும், கேரளாவில் 37 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், ராஜஸ்தானில் 22 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும், ஆந்திராவில் 4 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், சண்டிகாரில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 108 பேரில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 79 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com