

புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது துணை நிலை கேள்வி ஒன்றிற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு பதிலளித்து பேசினார். மேற்காசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்புடைய மோதலால் பதற்ற நிலை நீடிக்கிறது.
இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வான்வெளி பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு, விமான சேவைகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பது முக்கியம்.
இதனால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவின் 4,335 விமானங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 1,187 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று கூறினார்.
இந்த நெருக்கடியான சூழலில், விமான பாதுகாப்பு முக்கியம் என்பதுடன், வான்வெளி மூடப்பட்டுள்ளபோது, அந்த பகுதிகளில் விமானங்களை இயக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றார்.
எனினும், இந்த சூழலிலும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 780 பேர் பயணம் செய்துள்ளனர் என கூறினார். பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வான்வெளி திறந்திருப்பதும் முக்கியம். அதன்பின்னரே சீரான விமான சேவையை நாம் தொடர முடியும் என்றும் கூறினார்.