

புதுடெல்லி
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.
இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன.இந்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அங்கு சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க பிரதம உதவி துணை செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ், எல்லையில் சீனாவின் சாலை-கட்டுமான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு
இந்தியா தனது வடக்கு எல்லைகளை பாதுகாத்து வருவதாக நான் மதிப்பிட்டு உள்ளேன். இது இந்தியாவிற்கான கவலைக்குரிய விஷயமாகும் என கூறினார்.
டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவில் சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந்தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து கட்டுமான பணிகளை மறைப்பதற்காக கொட்டகைகள் அமைக்கப்பட்டடு உள்ளது.