

புதுடெல்லி,
தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் மருத்துவ படிப்பு, மருத்துவ மேல்படிப்பு, பல் மருத்துவ படிப்பு மற்றும் மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில் ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.