

புதுடெல்லி,
2016ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை 515 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் சமர்ப்பிக்காதது தெரிய வந்துள்ளது. இவர்களில், போலீஸ் டி.ஜி.பி.கள், கூடுதல் டி.ஜி.பி.கள், ஐ.ஜி.கள் ஆகியோரும் அடங்குவர். இத்தனை பேர் சொத்து விவரம் சமர்ப்பிக்காததால், மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கணக்கு சமர்ப்பிக்காதவர்களிடம் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விளக்கம் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
சொத்து விவரம் அளிக்காத ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வை நிறுத்தி வைத்தல், லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி சான்றிதழை நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.