இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு..!! புதிதாக 5,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் மேலும் 453 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த பல நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்குள் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 7ஆயிரத்து 081 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரு பக்கம் ஒமைக்ரான் வைரஸ் பயமுறுத்தினாலும்கூட கொரோனா கட்டுக்குள் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று புதிதாக 5,326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 19 சதவீதம் குறைவானதாகும். (இதில் கேரளாவில் மட்டும் 2,230 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,52,164 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 453 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,78,007 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.37 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,95,060 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.39 % ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு கடந்த 572 நாட்களில் குறைந்தபட்ச அளவாக தற்போது 79,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,38,34,78,181 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,55,911 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,14,079 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 66,61,26,659 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது இந்தியாவின் மொத்த ஒமைக்ரான பாதிப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com