

புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரத்து 110 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணம் அடைந்தோர் விகிதமும் 70 சதவீதத்தை தாண்டி (70.38) இருக்கிறது.
தற்போது இறப்பு வீதம் 1.98 சதவீதமாக சரிந்துள்ளது.
நாட்டில் கொரோனாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 27.64 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 7 லட்சத்து 33 ஆயிரத்து 449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 2.6 கோடியாக அதிகரித்துள்ளது.