துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 57 கிலோ குங்குமப்பூ - பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 57 கிலோ குங்குமப்பூ பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 57 கிலோ குங்குமப்பூ - பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது
Published on

பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் துபாய் நாட்டில் இருந்து சுருட்டு உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அந்த விமானத்தில் வந்த பயணிகளை, அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 2 பெண்களையும் தனியாக அழைத்து சென்று சோதனைக்கு உட்படுத்தினர். மேலும் அவர்களின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெண்ணின் சூட்கேசில் இருந்து 27 கிலோ குங்குமப்பூ, 16 ஐ-போன்கள், ஐ-போன்களுக்கு பயன்படுத்தும் 5 சார்ஜர்கள், 755 கிராம் சுருட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. இன்னொரு பெண்ணின் சூட்கேசில் இருந்து 30 கிலோ குங்குமப்பூ, 14 ஐ-போன்கள், ஐ-போன்களுக்கு பயன்படுத்தும் 5 சார்ஜர்கள், ஒரு கிலோ சுருட்டுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து அந்த பெண்களிடம் விசாரித்த போது அவர்கள் 2 பேரும் துபாயில் இருந்து மேற்கண்ட பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அந்த பெண்களிடம் இருந்து குங்குமப்பூ, ஐ-போன்கள் உள்பட ரூ.78 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அந்த 2 பெண்களையும் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் 2 பெண்கள் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண்களின் பெயர்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். அவர்கள் 2 பேரும் அகமதாபாத், மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com