5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கியதால் பிரதமர் பதவி ஏற்பு விழாவை சரத்பவார் புறக்கணித்தார்

5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதால் பிரதமர் பதவி ஏற்பு விழாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கியதால் பிரதமர் பதவி ஏற்பு விழாவை சரத்பவார் புறக்கணித்தார்
Published on

மும்பை,

டெல்லியில், ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரமாண்ட விழாவில் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அவருடன் 24 கேபினட், 33 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எனினும் இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொள்ளவில்லை.

சரத்பவாருக்கு 5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கியதால் தான் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அழைப்பிதழ் கிடைத்தவுடன் தேசிய கட்சி தலைவர், முன்னாள் முதல்-மந்திரி, முன்னாள் ராணுவ மந்திரி என்ற அடிப்படையில் சரத்பவாருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என அவரது அலுவலகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அவரின் இருக்கை எண் மட்டுமே மாற்றப்பட்டு வரிசை மாற்றப்படவில்லை என தெரிகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், பிரதமர் பதவி ஏற்பு விழாவில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சரத்பவார் கலந்து கொள்ளவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com