

புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ககோளி கோஷ் தஸ்திதார் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்து வடிவில் இன்று பதில் அளித்துள்ளார்.
அதில், நாட்டில் 2017 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் 1,050 பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் காயம் மற்றும் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்படி நாடு முழுவதும் பொதுமக்களில் 243 பேர் மரணம் அடைந்துள்ளனர். 599 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே காலகட்டத்தில் பாதுகாப்பு படையினரில் 288 பேர் மரணம் அடைந்தனர். 802 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களையும் அவர் வெளியிட்டார். இதன்படி, 687 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 616 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.