

மும்பை,
மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் இருந்து அரசு பஸ் இன்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதே மாவட்டத்தில் உள்ள கல்யாண் சாலையில் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்ததால், அதிலிருந்து கரும்புகளை இறக்குவதற்கு மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த கார் டிரைவர் வண்டியை நிறுத்தி, கரும்பு இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் திடீரென நின்று கொண்டிருந்த டிராக்டர், கார் மீது அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.